கை பேசியெத் தொறந்தா உதயன் கிட்டேருந்து ஒரு செய்தி 'எலி செஞ்ச வேலெயப் பாத்தீங்களா"ன்னு. எலி அவரு எனக்கு அனுப்பின மடலெத் தின்னுடிச்சாம். எனக்கு எலின்னா எப்பொவுமே பிடிக்காதுங்க. பாருங்க எங்க ஊட்டுலெ எலியெ எப்படி நான் வேட்டையாடுறேன்னு.
எலி வேட்டை – 1
நேற்று நான் 'இன்று எது பற்றி எழுதலாம்' என்று எண்ணிய போது மண்டைக்குள் மசாலா ஒன்றையும் காணோம். அது முற்றிலும் காலி. முனிவர்கள் சொல்வார்களே நீ முக்தி அடைய வேண்டுமானால் உன் எண்ண அலைகளை முழுவதும் அழித்துவிடு என்று அந்த நிலையை ஒருக்கால் அடைந்து விட்டேனோ என எண்ணி எனக்குள் ஒரு அல்ப சந்தோஷம். ஆனால் நீடிக்க வில்லை அது. "சட்டுனு இங்கெ செத்தெ வாங்கோ" என்றொரு குரல் சமையல் அறையிலிருந்து. என்ன ஆயிற்றோ என்று பதட்டத்துடன் ஓடினேன் உள்ளே.
மனைவியின் எடது கை வாய் முன்னே, வலது கையின் ஆள் காட்டி விறல் சாமான் உள் திசையில். பதிலுக்கு நானும் கேட்டேன் சைகையில், "என்ன?" என்று. மெள்ளச் சொன்னாள் மனைவி "உள்ளெ கர் கர்னு சத்தம் கேக்கறது. எலி வந்திருக்குன்னு நெனெக்கிறேன். போய்ப் பாருங்கோ" வென்று.
சாமான் அறை உள்ளே பூனை போல மெல்ல மெல்ல அடி வைத்துச் சென்றேன். அறையினுள் மூன்று அலமாறிகள். ஒவ்வொன்றிலும் நான்கு அறைகள். கர் கர் சத்தம் உள் பூராவுமே கேட்டது. முதலில் அருகில் இருந்த அலமாறியின் ஒரு அறையைக் காலி செய்தேன். பேக்கெட் பேக்கெட்டாய் பல வகைப் பருப்புகள். பொட்டுக் கடலைப் பேக்கெட்டை எடுத்த போது பொல பொலவெனக் கொட்டியது கடலை எலி கடித்த பொத்தல் வழியே. கூடவே இருந்த மிளகாய்ப் பேக்கெட்டுகளோ முழுசாய் இருந்தன சேதம் ஏதுமின்றி. கொத்தமல்லி பேக்கெட் பாதிக்கு மேல் காலி. அதனருகே நெல் உமிபோல மல்லித்தோல். கையில் எடுத்துப் பார்த்தால் அவற்றில் பருப்பைக் காணோம். தட்டு பூராவும் காலி செய்தேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் சத்தம் பக்கத்து அலமாறியிலிருந்து கேட்டது. ஒவ்வொரு அறை அருகிலும் காதை வைத்துக் கேட்டபோது மேல் தட்டிலிருந்து அதிகம் கேட்பதாகத் தோன்றியது எனக்கு. அந்த அறையில் இருந்த அட்டைப் பெட்டிகளை எல்லாம் ஒவ்வொன்றக எடுத்து மனைவி கையில் கொடுத்தேன் வெளியில் வைக்கச் சொல்லி. பின் வரிசைப் பெட்டிகள் எல்லாவற்றிலும் எலி புகும் அளவுக்கு ஓட்டை. அருகிலோ அட்டைத் துண்டுகளின் குப்பை. அதைப் பெருக்கி எடுத்தேன். மீதமிருந்தது பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கப் பட்ட பழய கேஸ் அடுப்பு ஒன்று. அடுப்புக்குள் எங்கே இருக்கும் எலி. எதற்கும் அதையும் ஆட்டிப் பார்ப்போம் என்று ஒரு குச்சியால் சற்று தூக்கி ஆட்டிப் பார்த்தேன். எலி வரவில்லை.
பசி வந்தது அதற்குள் எனக்கு. மதிய உணவும் ஆயிற்று.
உணவுக்குப் பின் சாமான் உள்ளை அடைந்த என் மனைவி கேஸ் அடுப்பைக் கையால் எடுத்தாள். எம்பிக் குதித்துப் பாய்ந்தது எலி எதிர் அலமாறிக்குள். "வீல்" என்று கத்தினாள் அவள். சரி பொறி வைத்துத் தான் பிடிக்க வேண்டும் இந்த எலியை என்றெண்ணி ஒன்றுக்கு ரெண்டாய் வைத்து ஜன்னலையும் கதவையும் சாத்தி விட்டு வந்தேன். இன்று காலை பார்த்தபோது ஒரு பொறியில் தேங்காயைக் காணோம். எலியையும் காணோம். மற்றொன்று வைத்த இடத்தில் வைத்தபடி இருந்தது.
இனி நாளை தொடரும் என் எலி வேட்டை.
எலி வேட்டை - 2
படம் பிடித்தது க.ந.நடராஜன்
எலிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர், எலி ஒர் ஆண்டில் ஐந்து அல்லது ஆறு முறை குட்டிகள் போடும், ஒவ்வொரு முறையும் சுமார் பத்துப் பன்னிரெண்டு குட்டிகள் என. இரண்டு எலிகள் அவற்றின் ஆயுட் காலத்திற்குள் சுமார் 500 முதல் 2000 வரையாகப் பெருகக்கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இவ்வாறு அளவுக்கு மீறி பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றையே உணவாக உட்கொள்ளும் ஆந்தைகளும் பாம்புகளும் தான்.
செப்டெம்பர், 13, 2007 ஹிந்து நாளிதழில் வெளிவந்த ஒரு ஆய்வின் படி நம் நாட்டில் பஞ்சாப் மாநிலம் ஒன்றில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 17,00,000 டன் உணவு தானியங்கள் எலிகளால் தின்று தீர்க்கப் படுகின்றனவாம்.
எலிகள் விளைக்கும் சேதம் பற்றி அறிந்திருந்த எனக்கு எப்போதும் எலிகளைக் கண்டவுடனே கொன்று விடவேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால் என் மனைவியோ அதற்கு நேர் எதிர். "ஐயோ பாவம். போகிறது விட்டு விடுங்கள். ஜன்னலைத் திறந்து. அது வெளியே போய் விடும்", என்பாள். இது இன்றைய நிலை இல்லை. என்றுமே எங்கள் வீட்டில், அதாவது கூட்டுக் குடும்ப நாட்களிலேயே, இரண்டு கட்சிக்கும் சம பலம்தான். ஓட்டெடுத்திருந்தால் தொங்கு நிலை வந்திருக்குமோ என்னவோ?
சரி நாம் நேற்று ஆரம்பித்து வைத்த எலி வேட்டையின் கதைக்கு வருவோம்.
இன்று எப்படியும் அந்த எலியை அடித்துக் கொன்று விடுவது என்ற ஒரே எண்ணத்துடன் கையில் ஒரு சிறு மூங்கில் குச்சியுடன் மெதுவாக சாமான் உள் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தேன். மனைவியும் என் பின்னேயே வந்தாள். ஒவ்வொன்றாக ஒரு அலமாரியில் இருந்த பாத்திரங்களை மனைவியிடம் கொடுக்க அவள் அதை வாங்கி சமையல் உள்ளே வைத்தாள். அப்போது ஒரு பாத்திரத்தை நான் நகர்த்திய போது திடீரெனெ காலியாக இருந்த அலமாறிக்குள் தாவி ஒரு வினாடி மூலை ஒன்றில் பதுங்கியது எலி. அதே சமயம் துள்ளி வெளியே குதித்த மனைவி தன் பின்னே கதவையும் சாத்திக் கொண்டு போனாள்.
'ஆகா அடிக்க வாட்டமாக இருக்கிறது' என்றெண்ணி கையில் இருந்த குச்சியை ஓங்கி வீசினேன் எலியை நோக்கி. 'நாமொன்று நினைக்க நடப்பது வேறொன்று' என்பது தானே விதி? அடி எலியின் மீது விழ வில்லை. பதிலாக வரும் வழியிலேயெ அந்த அடி ஒரு ஜாடியின் மீது விழ, அது 'படார்' என்ற சத்ததுடன் கீழே விழ, உடைந்தது சுக்கு நூறாக பீங்கான் ஜாடி. இந்த வருடம் மாவடு வாயில், தப்பு தப்பு, மாவடு தின்ன ஏங்கும் என் வாயில் மண்ணுதான் என்றெண்ணி வருந்தினேன்.
"என்ன ஆச்சு?" என்று கேட்டபடி உள்ளே வந்த சகதர்மிணி தரையில் கிடந்த ஜாடிச் சிதரல்களைப் பார்த்ததும், "போரும் நீங்க எலி அடிச்சது. பேசாமெ ஜன்னலெத் தெறந்து வெச்சூட்டு கதவெச் சாத்திண்டு வாங்கோ. எலி தானா வெளிலெ போய்டும்", என்றாள்.
வாயைத் திறக்க முடியுமோ? அதான் முதலிலேயே சொல்லி விட்டாளே "பேசாமெ" என்று. சொன்னதைச் செய்து விட்டு வெளியே வந்தேன் அசடு வழிய நான்.
நடராஜன் கல்பட்டு
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
No comments:
Post a Comment